மதுராவின் அமைதியை கெடுக்க சிலர் முயற்சி செய்கிறார்கள் என பாரதிய கிசான் யூனியனின் தேசிய செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திகாயத் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து திங்களன்று உத்திரபிரதேச மாநிலம் மதுராவில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராகேஷ் திகாயத், எந்தக் கட்சியின் பெயரையும் குறிப்பிடாமல், அவர்களுக்கு இங்கு வாக்குகள் கிடைக்கவில்லை.ஆகவே, மக்கள் அமைதியாக பிராத்தனை செய்து, இயல்பாக வாழ்க்கை நடத்தி வரும் யாத்திரை நகரான மதுராவின் அமைதியைக் கெடுக்க முயற்சிக்கிறார்கள் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
முசாபர்நகர் போன்று மதுராவின் சூழலை கெடுக்க விரும்புபவர்களின் முயற்சிகளைத் தோற்கடியுங்கள். அத்தகையவர்களிடம் இருந்து கவனமாக இருங்கள்.அவர்களின் பொறியில் மாட்டிக்கொள்ள வேண்டாம். இல்லையெனில், மதுராவில் கலவரத்தை உருவாக்கி, வேலையின்மையை அதிகரிக்க செய்துவிடுவார்கள் என்று ராகேஷ் திகாயத் எச்சரித்துள்ளார்.
மதுரா ஈத்காவில் சில நாட்களுக்கு முன்பு காவல்துறை மற்றும் துணை ராணுவத்தினரின் பாதுகாப்பில் மசூதியில் தொழுகைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. சங்பரிவாரத்தினர் ஈத்காவில் கிருஷ்ணர் சிலையை வைக்க திட்டமிட்டு கலகம் செய்து வரும் சூழ்நிலையில், ராகேஷ் திகாயத் இவ்வாறு பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.